முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை


முன்விரோதத்தில் வாலிபர் குத்திக்கொலை
x

கல்லல் அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

கல்லல் அருகே வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

ஊர் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள ராமநாயக்கானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் மெய்யர் (21). கூலித்தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில்ராமநாயக்கானேந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கோவில் கட்டுவது தொடர்பாக ஊர் கூட்டம் நடத்தி உள்ளனர்.

குத்திக்கொலை

கூட்டம் முடிந்த பின்னர் ராஜேசுக்கும், மெய்யருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மெய்யர் தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேசை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் ராஜேஷ் விழுந்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

இதைப்பார்த்த மெய்யர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கிராம மக்கள் ராஜேசை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் பாதுகாப்பு

இது குறித்து அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார், கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மெய்யரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



Next Story