டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்


டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:45 PM GMT)

டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என கூறி கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் வணிகர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரில் உள்ள சில்லறை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் வணிகவரித்துறையினர் அவ்வப்போது டெஸ்ட் பர்ச்சேஸ் என்று கூறி திடீர் சோதனை நடத்தி அதன் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு பில் கொடுக்காத வணிகர்களுக்கு ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதனால் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருக்கோவிலூர் அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், வியாபார பிரமுகர்கள், திருக்கோவிலூர் சங்க தலைவர் கே.ஏ.ராஜா, செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் நாமத்துரை ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பேரணியாக திருக்கோவிலூர் செவலைரோட்டில் உள்ள வணிகவரித்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்தஅதிகாரியிடம் கோரிக்கையை மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

திருக்கோவிலூரில் சில்லறை கடை விற்பனை மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் நாங்கள் முறையாக வரி செலுத்தப்பட்ட பொருட்களையே வாங்கி விற்பனை செய்து வருகிறோம்.

ரத்து செய்ய வேண்டும்

அதேபோல் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்யும் போது முறையாக பில் கொடுத்து விற்பனையும் செய்கின்றோம். அவசரத்தில் அல்லது கூட்ட நெரிசலில் ஏதேனும் ஒரு வாடிக்கையாளருக்கு பில் இல்லாமல் கொடுக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்போது வணிகவரித்துறையினர் இதனை ஒரு குற்றமாக கருதி சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதனால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே வணிகர்களுக்கு டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற முறையில் உடனடியாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர் அப்போது வியாபார பிரமுகர்கள் அருணா ராமலிங்கம், பரணி மோட்டார்ஸ் பரணிதரன், பட்டேல் மரவாடி ரவிலால், ஆர்.பி.ரவிச்சந்திரன், மாணிக்கம், ராமச்சந்திரன், கோபி, மகாலிங்கம், சீனு, புருஷோத், கண்ணன், கதிரேசன், சீனு, முரளி, அண்ணாமலை உள்ளிட்ட100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வணக்கம் வாசன் எண்டர்பிரைசஸ் நிர்வாகி எஸ்.எஸ்.வாசன் நன்றி கூறினார்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமையில் மாவட்ட செயலாளர் முத்து, நகர செயலாளர் இன்பராஜ், நகர பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பேரணியாக வணிகவரித்துறை அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த துணை வணிகவரி அலுவலர் நல்லமுத்துவிடம் வணிகர்களை கடுமையாக பாதிக்கும் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோரிக்கை மனு அளித்தனர். அப்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் கள்ளக்குறிச்சி நகர ஓட்டல் சங்க தலைவர் கரிகாலன் ரமேஷ், மாவட்ட பிரதிநிதிகள் சேகர், செல்வம், ராயப்பன், வைத்தீஸ்வரன், சவுந்தரராஜன்,பாபு,பழனி, ராஜேந்திரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட,நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story