மகனை அடித்து கொன்ற ஜவுளி வியாபாரி


மகனை அடித்து கொன்ற ஜவுளி வியாபாரி
x

திண்டுக்கல் அருகே மகனை ஜவுளி வியாபாரி அடித்து கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை அருகே உள்ள மேலக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 57). ஜவுளி வியாபாரி. அவருடைய மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதிக்கு கதிர் (35), குணா (33) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கதிர் சென்னையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.

2-வது மகனான குணா, எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதற்கிடையே குணா, தனது தந்தை மோகன்ராஜ் மற்றும் தெருவில் வருவோர் போவோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை மோகன்ராஜூடன் குணா தகராறு செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த மோகன்ராஜ், தனது மகன் என்று பாராமல் தான் வைத்திருந்த கட்டையால் குணாவின் தலையில் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த குணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் மோகன்ராஜ், சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் குணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். முன்னதாக சம்பவ இடத்துக்கு வந்த திண்டுக்கல் உதவி சூப்பிரண்டு அருண் கபிலன் விசாரணை நடத்தினார். மகனை, தந்தையே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story