மாடு மேய்த்த பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு


மாடு மேய்த்த பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
x

செந்துறை அருகே மாடு மேய்த்த பெண்ணின் தாலி சங்கிலியை பறித்து சென்ற திருடனை 2 மணி நேரத்தில் மடக்கி பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

அரியலூர்

தாலி சங்கிலி பறிப்பு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி(வயது 55). இவர் தனது முந்திரி தோப்பில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட வாலிபர் மறைந்து வந்து அவரை தாக்கி வாயை துண்டால் கட்டி விட்டு அவர் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிரைம் சப்- இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான தனிப்படை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புரட்சி தமிழன் என்பதும், அவர் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இவர் அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் வயதான மற்றும் கார்ப்பிணிகளை குறிவைத்து இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கையும், களவுமாக பிடித்தனர்

அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்து அவரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர் இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் திருடிய தாலிச் சங்கிலியை விற்பனை செய்ய புறப்படும் போது கையும், களவுமாக பிடித்தனர்.

அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்ததோடு, நகைகளையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததோடு, நகைகளையும் பறிமுதல் செய்த போலீசாரை பரணம் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story