டி.டி.எப் வாசன் வந்த காரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார்...!


டி.டி.எப் வாசன் வந்த காரை பறிமுதல் செய்த போக்குவரத்து போலீசார்...!
x

டி.டி.எப் வாசன் வந்த காரை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை,

கோவையைச் சேர்ந்தவர் டி.டி.எப் வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பயணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வருகிறார். இவரின் யூடியூப் பக்கத்திற்கு 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும் இவருக்கு வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் டி.டி.எப் வாசன் கடலூர் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில குவிந்ததால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

போலீசார் அங்கு திரண்டவர்களை விரட்டி அடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 200க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் டி.டி.எப் வாசன் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் . இன்று வடபழனியில் உள்ள தியேட்டரில் ஒரு படத்தின் முன்னோட்டத்தை காண டி.டி.எப் வாசன் வந்துள்ளார். அப்போது அவர் நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்துள்ளார். இதனை கண்டறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் டி.டி.எப் வாசன் வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது டி.டி.எப் வாசன் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து டி.டி.எப் வாசனுக்கு இந்த தகவல் தெரியவர, விரைந்து காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு சென்ற டி.டி.எப் வாசனிடம் காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது இந்த கார் தன்னுடையது அல்ல என்றும், தனது நண்பரின் காரில்தான் தான் வந்ததாகவும் கூறினார். இருப்பினும் அவர் கூறிய காரணங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story