சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்தது


சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 11 Dec 2022 7:30 PM GMT (Updated: 11 Dec 2022 7:30 PM GMT)

நல்லம்பள்ளி அருகே சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அருகே சபரிமலைக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த பக்தர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.

வேன் கவிழ்ந்தது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து கேரள மாநிலம் சபரிமலைக்கு 15-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் புறப்பட்டனர். இந்த வேன், தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே நேற்று அதிகாலை நேரத்தில் வந்து கொண்டிருந்தது.

திடீரென வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்த பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். இந்த விபத்தில் வேனில் இருந்த அய்யப்ப பக்தர்கள் சிலர், லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கிய அய்யப்ப பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வேனை, போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story