கிராமத்தையும் தூய்மையாக பேணி காத்து பராமரிக்க வேண்டும்


கிராமத்தையும் தூய்மையாக பேணி காத்து பராமரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 26 Jan 2023 6:45 PM GMT)

வீட்டை சுகாதாரமாக பேணி காப்பதுபோல் கிராமத்தையும் தூய்மையாக பேணி காத்து பராமரிக்க வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வேண்டுகோள் விடுத்தார்

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

கிராமசபை கூட்டம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நயினார்பாளையம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் குடியரசு தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டா் பேசியதாவது:-

அதிகளவில் பங்கேற்று

கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கும், அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொள்வதற்கும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கிராம வளர்ச்சிக்காக செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று கிராமப்புற வளர்ச்சிக்கு பெரிதும் உதவிட வேண்டும். நமது வீட்டை சுகாதாரமாக பேணி காப்பது போல் நமது கிராமத்தையும் தூய்மையாக பேணிகாத்து பாரமரிக்க வேண்டும். கிராமத்தை சீர்மிகு கிராமமாக மாற்ற பொதுமக்கள் பெரும் பங்காற்றிட வேண்டும்.

இவ்வாறு அவா் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், விழிப்புணர்வு உறுதிமொழி கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் மகளிர் திட்டம் சார்பில் கிராம கூட்டமைப்பு நிதி மூலம் 4 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் நிதி உதவி, ஊர வளர்ச்சித் துறையின் சார்பில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் என 18 பேருக்கு சான்றிதழ், சீருடை, பரிசு பொருட்கள், தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் 12 பயனாளிகளுக்கு இடுபொருட்கள், சுகாதாரத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகம், 5 கர்ப்பிணிகளுக்கு முருங்கை கன்றுகளையும் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், இந்திராணி, ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி அன்பு, துணை தலைவர் சுகுணா வெங்கடேசன் சின்னசேலம் தாசில்தார் இந்திரா மற்றும் ஊராட்சி செயலாளர், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story