ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்தது


ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 27 Sep 2023 9:15 PM GMT (Updated: 27 Sep 2023 9:15 PM GMT)

கோத்தகிரியில் மழை பெய்யாததால் ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் மழை பெய்யாததால் ஈளாடா தடுப்பணையின் நீர்மட்டம் குறைந்து உள்ளது.

குடிநீர் வினியோகம்

கோத்தகிரி அருகே கோடநாடு ஈளாடா பகுதியில் தடுப்பணை உள்ளது. 90 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும், 12 அடி ஆழமும் கொண்டது. அதன் அருகில் உள்ள மலைப்பகுதி ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீர் தடுப்பணையில் தேக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர், கோத்தகிரி நேரு பூங்கா அருகில் உள்ள நீர்உந்து நிலைய தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் நகர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இது மட்டுமின்றி தடுப்பணை நீரை நம்பி, தடுப்பணைக்கு அருகே உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக கோடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் ஈளாடா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர்ந்து தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வந்தது.

மின் மோட்டார்கள் பழுது

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்யவில்லை. மேலும் தடுப்பணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணையின் நீர்மட்டம் 9 அடியாக குறைந்து உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கோத்தகிரி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மாற்று திட்டமாக ரூ.10.60 கோடி செலவில் அளக்கரை குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதிலுள்ள நீர் உந்து அறைகளில் ஏற்பட்டு வரும் மின்னழுத்த குறைபாடு காரணமாக மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாவதால், குடிநீர் வினியோகம் கடந்த 2 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த மின் மோட்டார்கள் பழுதை நீக்கி, அந்த திட்டத்தின் கீழும் குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story