புதர்மண்டிக் கிடக்கும் அரசு ஆஸ்பத்திரி வளாகம்


புதர்மண்டிக் கிடக்கும் அரசு ஆஸ்பத்திரி வளாகம்
x
தினத்தந்தி 4 July 2023 11:43 AM GMT (Updated: 5 July 2023 9:53 AM GMT)

ஜல்லிப்பட்டியில் அரசு ஆஸ்பத்திரிவளாகம் புதர் மண்டிக்கிடக்கிறது.

திருப்பூர்

அரசு ஆஸ்பத்திரி

உடுமலையை அடுத்த ஜல்லிபட்டியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரி வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருகின்ற பொதுமக்கள் விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

ஏழை எளிய மக்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கும் சிகிச்சை பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் பல்வேறு விதமான நோய்களை குணப்படுத்துவதற்காக ஆஸ்பத்திரியை நாடி வருகின்றோம். ஆனால் ஆஸ்பத்திரி வளாகம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. வளாகத்தில் புற்கள், பார்த்தீனியம் செடிகள் முளைத்து விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறி உள்ளது. மேலும் சுவற்றை ஒட்டியவாறு படர்ந்துள்ள கொடி மூலமாக பாம்புகள் கட்டிடத்தின் மேலே சென்று விடுகிறது.

இதனால் உள் நோயாளியாக சிகிச்சைக்கான அனுமதிக்கப்படும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

தூய்மைப்படுத்த வேண்டும்

சுகாதாரத்தை தேடி வருகின்ற எங்களுக்கு வளாகத்தில் புதர்மண்டி சுகாதாரமற்ற நிலை நிலவுவது வேதனை அளிக்கிறது. எனவே ஜல்லிபட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்..


Next Story