பாலாற்றில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது; சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன் கைது


பாலாற்றில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது; சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன் கைது
x

பாலாற்றில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. சொத்துக் காக மாமியாரை கொன்று வீசிய மருமகன் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

பெண் பிணம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் அருகே வேப்பஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள பாலாற்றில் கடந்த 12-ந்தேதி பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீசார் பாலாற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மற்றும் கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

சொத்துக்காக கொலை

இந்த நிலையிலும், இறந்தவர் யார் என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இறந்த பெண்மணி கல்பாக்கம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சாந்தி (வயது 50) என்பது தெரியவந்தது. சம்பவம் நிகழ்ந்த அன்று திருக்கழுக்குன்றம் அருகே வல்லிபுரம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள வந்த மருமகனுடன் தாய் இல்லாத தனது பேரப்பிள்ளைகளை பார்க்க சாந்தி மரக்காணம் சென்றுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதை வைத்து போலீசார் சந்தேகமடைந்து மருமகன் ஆனந்ததை அழைத்து துருவி, துருவி விசாரித்தனர். விசாரணையில் மாமியார் சாந்தி பெயரில் உள்ள சொத்துகளை பேரப்பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்க வலியுறுத்தியதாகவும், அதற்கு சம்மதிக்காத மாமியாரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், அவரது உடலை 17 வயது நிரம்பிய தனது உறவினர் ஒருவருடன் காரில் கொண்டு வந்து வாயலூர் பாலாற்றில் வீசிவிட்டு சென்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைது

வாக்குமூலத்தின் அடிப்படையில் கூவத்தூர் போலீசார் ஆனந்தன் மற்றும் அவரது உறவினரான 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

போலீசார் சிறுவனை சிறார் சிறையிலும், ஆனந்தனை திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையிலும் அடைத்தனர்.


Next Story