நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரி கைது


நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரி கைது
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:46 PM GMT)

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாியில் பெண் டாக்டருக்கு தொல்லை கொடுத்த மருத்துவ அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

பெண் டாக்டர்

நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். படிப்பு முடித்தவர்கள் பயிற்சி டாக்டர்களாக அங்கேயே பணியாற்றி வருகின்றனர். மேலும் ஏராளமான டாக்டர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 35 வயது பெண் டாக்டர் ஒருவர் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொந்தரவு

நான் வேலை பார்த்து வரும் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் ஆசாரிபள்ளம் அனந்தன்நகரை சேர்ந்த ஆன்டனி சுரேஷ்சிங் (வயது 52) உறைவிட மருத்துவராக (பொறுப்பு) உள்ளார். நான் தினமும் வருகை பதிவேட்டில் கையொப்பம் போட செல்லும் போது ஆன்டனி சுரேஷ்சிங் அவரது இன்பத்துக்கு உடன்பட வேண்டும் என்று கேட்கிறார்.

மேலும் விரும்பத்தகாத செயல்களை செய்து வருகிறார். அதோடு நின்று விடாமல் வெறுப்பூட்டும் வகையில் பின் தொடர்ந்து வருகிறார். என் மானத்தை அவமதிக்கும் எண்ணத்துடன் சைகை செய்கிறார். மேலும் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உறைவிட மருத்துவர் கைது

இந்த புகார் மனு தொடர்பாக நேற்று காலை ஆயுர்வேத மருத்துவக்கல்லூரிக்கு சென்று உறைவிட மருத்துவர் ஆன்டனி சுரேஷ்சிங் மற்றும் பெண் டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பயிற்சி பெண் டாக்டர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையானது வெகுநேரம் நீடித்தது.

இந்த விசாரணைக்கு பிறகு உறைவிட மருத்துவர் ஆன்டனி சுரேஷ்சிங் மாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக கடந்த 6-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு உறைவிட மருத்துவர் ஆன்டனி சுரேஷ்சிங் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story