தீயில் கருகி பெண் பலி

கபிஸ்தலம் அருகே சார்ஜ் போட்டபடியே பேசியதால் செல்போன் வெடித்து தீயில் கருகி பெண் பலியானார்.
கபிஸ்தலம் அருகே சார்ஜ் போட்டபடியே பேசியதால் செல்போன் வெடித்து தீயில் கருகி பெண் பலியானார்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே நடந்த இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கணவரை இழந்த பெண்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள விசித்திரராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபாகரன் மனைவி கோகிலாம்பாள்(வயது 33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள மேல கபிஸ்தலம் கொத்த தெரு பகுதியில் கெடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.
செல்போன் வெடித்து தீயில் கருகி பலி
நேற்று மதியம் கோகிலாம்பாள் தனது கடையில் செல்போனை சார்ஜில் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து தீ பிடித்தது.
இதில் கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி பலியானார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான கோகிலாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.