லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி


லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
x

நெல்லை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நடந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நடந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியானார்.

தாய்-மகன்

நெல்லை அருகே உள்ள நாரணம்மாள்புரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பரமசிவம். இவர் நெல்லை டவுன் பகுதியில் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி சேர்மக்கனி (வயது 46).

இவர் நேற்று தனது மூத்த மகன் முகேஷ்குமாருடன் (23) மோட்டார் சைக்கிளில் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க சென்றார். பின்னர் அவர்கள் அங்கு இருந்து வீடு திரும்பினர்.

லாரி சக்கரத்தில் சிக்கி...

மோட்டார் சைக்கிள் தாழையூத்து அருகே அருகன்குளம் சாலை விலக்கு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முகேஷ்குமார் சாலையோரத்தில் விழுந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சேர்மக்கனி லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சேர்மக்கனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story