கருவாடு காயவைக்கும் பணி மும்முரம்


கருவாடு காயவைக்கும் பணி மும்முரம்
x

கருவாடு காயவைக்கும் பணி மும்முரம்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம் பகுதியில் கருவாடு காயவைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

கோழிகளுக்கு தீவனம்

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகு மீனவர்களும், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிதொழில் செய்து வருகின்றனர்.

இந்த படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வருகின்றனர். இதில் கழிவாக கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வாங்கி துறைமுகங்களிலேயே காயவைத்து கருவாடு விற்பனை தொழிலும் செய்துவருகின்றனர்.

உணவிற்கு பயன்படும் கருவாடுகளைவிட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறியவகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்புள்ளது. இந்த வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கருவாடு காயவைக்கும் பணி

இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர்.

கடந்த ஒரு மாதமாக இந்த பகுதிகளில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வந்ததாலும், பொங்கல் பண்டிகை வந்ததாலும் கருவாடு காயவைக்கும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து தவித்து வந்தனர். இந்தநிலையில் 1 மாதத்திற்கு பின் மீண்டும் கருவாடு காயவைக்கும் பணியில் மீனவ தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story