தொழிலாளி அடித்துக்கொலை


தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 28 July 2023 6:45 PM GMT (Updated: 28 July 2023 6:46 PM GMT)

பேரளம் அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற தந்தை-மகன்களை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்

நன்னிலம்:

பேரளம் அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற தந்தை-மகன்களை போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள மானந்தகுடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது52). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களது எதிர் வீட்டில் வசித்து வருபவர் ராமையன்(62).

நேற்று முன்தினம் இரவு முருகனும், ஜெயந்தியும் எதிர்வீட்டில் வசித்து வரும் ராமையனை பற்றி திட்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அடித்துக்கொலை

இதை தொடர்ந்து ராமையன், முருகனிடம் சென்று என்னை ஏன் திட்டுகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த ராமையனின் மகன்கள் சாந்தகுமார்(38), சசிகுமார்(36), சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து முருகனை உருட்டை கட்டையால் தாக்கினர்.

அப்போது இதை பார்த்து அங்கு வந்த முருகனின் மகன் ஜெகதீசன், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். அவரையும், 3 பேர் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த முருகன், ஜெகதீசனையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முருகனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஜெகதீசன் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தந்தை-மகன்கள் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமையன், சாந்தகுமார், சசிகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இ்ந்த வழக்கில் தொடர்புடைய சதீஷ்குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story