நங்கூர ரோப் சுற்றி தொழிலாளியின் கைகள் சிதைந்தன


நங்கூர ரோப் சுற்றி தொழிலாளியின் கைகள் சிதைந்தன
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:46 PM GMT)

விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற போது நங்கூர ரோப் சுற்றி தொழிலாளியின் கைகள் சிதைந்தன

கன்னியாகுமரி

குளச்சல்,

வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைதோப்பு மேலத்துறையை சேர்ந்தவர் ஜெகன் (வயது39). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய விசைப்படகில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணத்தை சேர்ந்த பாஸ்கரன் (52) மீன் பிடித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஜெகனின் விசைப்படகு முட்டம் தனியார் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றது. இதில் பாஸ்கரன் உள்பட 19 மீனவர்கள் இருந்தனர். விசைப்படகு முட்டம் கடல் பகுதியில் 40 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் இருந்த போது அதிகாலை 4 மணியளவில் பாஸ்கரன் கடலில் பாய்ச்சி இருந்த நங்கூரத்தை மேலே தூக்கினார். அப்போது எதிர்ப்பாராமல் அவரது இரண்டு கைகளிலும் நங்கூர ரோப் சுற்றி சிதைந்தது. இதனால் வலியால் துடித்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story