இளம்பெண் மர்மச்சாவு; கணவர் கைது


இளம்பெண் மர்மச்சாவு; கணவர் கைது
x

வேட்டவலம் அருகே இளம்பெண் மர்மச்சாவில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

வேட்டவலம் அருகே இளம்பெண் மர்மச்சாவில் கணவரை போலீசார் கைது செய்தனர்.

கணவன்-மனைவி தகராறு

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள பெரியஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ் (வயது 32). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகள் ஜெயபாரதி (24) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

நரேஷ் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் நரேஷ் சொந்தமாக தொழில் செய்ய ஜெயபாரதியின் பெற்றோரிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கிவர சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயபாரதி அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஒரு வருட காலமாக ஜெயபாரதி அவரது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தனர்.

தூக்கில் பிணம்

அதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நரேஷ் தனது மனைவியுடன் ஒழுங்காக குடும்பம் நடத்துவதாக கூறி ஜெயபாரதியை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்று உள்ளார்.

இதையடுத்து மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நரேஷ் வீட்டின் மாடியில் உள்ள அறையில் ஜெயபாரதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த வேட்டவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் இதுகுறித்து ஜெயபாரதியின் தாய் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாரதி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் கைது

இதற்கிடையில் நேற்று மாலை திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஜெயபாரதியின் உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயபாரதியின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய வேண்டும் என்று தரையில் அமர்ந்து கதறி அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் நரேஷை கைது செய்தால் தான் ஜெயபாரதியின் உடலை மருத்துவமனையில் இருந்து வாங்குவோம் என்று கூறினர்.

தொடர்ந்து அவர்களிடம் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் வேட்டவலம் போலீசார் நரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த ஜெயபாரதிக்கு திருமணம் நடைபெற்று 5 ஆண்டுகள் தான் ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story