தீரன் சின்னமலை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்


தினத்தந்தி 16 Oct 2022 7:45 PM GMT (Updated: 16 Oct 2022 7:45 PM GMT)

தீரன் சின்னமலை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கொங்கு வேளாளர் அறக்கட்டளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

சேலம்

தீரன் சின்னமலை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்று கொங்கு வேளாளர் அறக்கட்டளை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

கொங்கு வேளாளர் அறக்கட்டளை

கொங்கு வேளாளர் அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் மற்றும் 23-ம் ஆண்டு விழா ஆகியவை சேலம் நெய்காரப்பட்டியில் பொன்னாகவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் சின்னமுத்து வரவேற்றார். செயலாளர் நடராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் முத்துராஜன் வரவு- செலவு தாக்கல் செய்தார்.

சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி வாசுகி கலந்து கொண்டு 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அணியாபுரம் சுப்பையா கவுண்டர் நினைவு கோப்பை மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

ஆட்கள் பற்றாக்குறை

கூட்டத்தில் காவிரி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையை போக்க விவசாய பணிகளுக்கு, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாற்றை பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சேலம்- உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையை முழுமையாக 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும். சேலம் டால்மியா போர்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து கிழாக்காடு- செட்டிச்சாவடி வரை குண்டும், குழியுமாக மாறிப்போன சாலையை சீர்படுத்த வேண்டும். ஏற்காடு அடிவாரம், கன்னங்குறிச்சி வழியாக அயோத்தியாப்பட்டணம் வரை புதிதாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கொங்கு மகளிர் அணி சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் அறக்கட்டளை துணை செயலாளர் ஜெயவேல் நன்றி கூறினார்.


Next Story