5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு


5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 1 Aug 2023 7:30 PM GMT (Updated: 1 Aug 2023 7:30 PM GMT)

மயிலாடுதுறையில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 5 கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மளிகை கடைகள்

மயிலாடுதுறை ரெயில்வே மேம்பாலம் பகுதி மளிகை மொத்த விற்பனை கடைகளும், தானிய மண்டிகளும் அதிக அளவில் அமைந்துள்ள முக்கிய கடைவீதியாகும். இந்த கடைவீதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அமைந்துள்ள 3 மளிகை மொத்த விற்பனை கடைகள், ஒரு பேன்சி ஸ்டோர் மற்றும் ஒரு குடோன் ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

இதில் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்பூட்டை உடைக்க முடியாத காரணத்தால் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து அருகில் உள்ள சாதிக்அலி, முகமது அப்துல்காதர், பாலபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான மளிகை கடைகள், குடோன், பேன்சி கடை ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து உள்ளே இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.

கண்காணிப்பு கேமரா

இந்த சம்பவம் தொடர்பாக சாமிநாதன் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றிய போலீசார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே இடத்தில் 5 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நடந்த திருட்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலடி கடைவீதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story