திருவாலங்காடு அருகே 2 கடைகளில் திருட்டு; 6 கடைகளில் திருட முயற்சி


திருவாலங்காடு அருகே 2 கடைகளில் திருட்டு; 6 கடைகளில் திருட முயற்சி
x

திருவாலங்காடு அருகே 2 கடைகளில் திருட்டு நடந்துள்ளது. 6 கடைகளில் திருட முயற்சி நடந்துள்ளது.

திருவள்ளூர்

கடைகளின் பூட்டு உடைப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பகுதியில் உள்ள மிட்டாய் கடை, பங்க் கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம் மற்றும் பேரம்பாக்கம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மளிகை கடை, போட்டோ ஸ்டுடியோ, இரு சக்கர வாகன பஞ்சர் கடை உட்பட 8 கடைகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதில் ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள், தணிகாசலாம் என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடையில் ரூ.2 ஆயிரம் ரொக்கமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேற்கண்ட 6 கடைகளில் பணம் எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் கடைகளில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் கடைதிறக்க வந்த உரிமையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும்

இதுகுறித்து திருவலாங்காடு போலீசருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பூட்டு உடைக்கப்பட்ட கடைகளை ஆய்வு செய்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 6 மாதத்திற்கு ஒருமுறை இந்த பகுதியில் கடை, வீடுகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிப்பது தொடர்கதையாகி விட்டது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story