மூங்கில்துறைப்பட்டு அருகே2 மருத்துவமனைகளில் நூதனமுறையில் செல்போன்கள் திருட்டுமுக கவசத்துடன் கைவரிசை காட்டிய மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


மூங்கில்துறைப்பட்டு அருகே2 மருத்துவமனைகளில் நூதனமுறையில் செல்போன்கள் திருட்டுமுக கவசத்துடன் கைவரிசை காட்டிய மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு அருகே 2 மருத்துவமனைகளில் நூதனமுறையில் செல்போன்களை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், கடலூர் மாவட்டம் பெண்ணாடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் கடைகள், ஓட்டல்கள், மருத்துவமனைகளுக்கு முககவசம் அணிந்து வரும் மர்மநபர், கடை உரிமையாளர்கள், மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகளிடம் நன்கொடை கேட்டு பேசி, ரசீது கொடுத்து, அவர்களின் கவனத்தை திசை திருப்பி, மேஜை மீது வைத்திருக்கும் அவா்களது செல்போன்களை லாகவமாக நூதன முறையில் திருடிச் செல்லும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரின் காட்சிகளை பார்வையிட்டு, அந்த நபரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மூங்கில்துறைப்பட்டு பகுதிக்குட்பட்ட மேல்சிறுவள்ளூரில் இயங்கி வரும் 2 மருத்துவமனைகளுக்கு முககவசம் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், 2 செவிலியர்களிடம் நன்கொடை கேட்பது போல் நடித்து, கவனத்தை திசை திருப்பி, அவர்களது விலை உயர்ந்த 2 செல்போன்களை திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த தனித்தனி புகார்களின் பேர்களில் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போன்களை குறி வைத்து திருடும் மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story