வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு
x

நாட்டறம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் 400 கிராம் வெள்ளி பொருட்களை திருடிய மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பாதாம், பிஸ்தாவையும் சாப்பிட்டு சென்றுள்ளனர்.

திருப்பத்தூர்

பூட்டு உடைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த எல்லப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 55). இவரது மனைவி செல்வராணி (50). இவர்களது மகன் ராகுல் (27) ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதனால் அவர் நயானசெருவு பகுதில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். பரந்தாமன் மற்றும் செல்வராணியும் மருமகளுடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் பரந்தாமன் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நகை திருட்டு

உடனடியாக அவர் வந்து பார்த்தபோது, வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் 400 கிராம் வெள்ளி கொலுசுகளை திருடி சென்றது தெரிய வந்தது.

மேலும் பீரோவில் இருந்த பாதம், பிஸ்தாவையும் மர்ம நபர்கள் எடுத்து சோபாவில் அமர்ந்து ருசித்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story