83 பவுன் நகை திருட்டு வெளிமாவட்ட ஆசாமி கைவரிசையா?:


83 பவுன் நகை திருட்டு  வெளிமாவட்ட ஆசாமி கைவரிசையா?:
x

83 பவுன் நகை திருட்டில் வெளிமாவட்ட ஆசாமி கைவரிசை காட்டி உள்ளாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆண்டேஸ்வரன் (வயது 47). இவர் நெல்லை மாவட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் சென்னையில் படித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக கடந்த மாதம் வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சென்றிருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த 80 பவுன் நகைகள், 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆண்டேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நான்குவழிச் சாலை வரையில் சுமார் 250 கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் ஆண்டேஸ்வரன் வீட்டு பகுதியில் நடமாடியது தெரிய வந்தது. அவர் வந்து சென்ற இடங்களை கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்ததில் அவர் இருசக்கர வாகனத்தில் நெல்லை மாவட்ட பகுதிக்குள் நுழைந்தது தெரிய வந்தது. எனவே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசாமிதான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. விரைவில் குற்றவாளியை கைது செய்துவிடுவோம் என போலீசார் தெரிவித்தனர்.

-**


Next Story