போலீஸ் நிலையம் அருகே கடையில் பணம் திருட்டு


போலீஸ் நிலையம் அருகே கடையில் பணம் திருட்டு
x

போலீஸ் நிலையம் அருகே கடையில் பணம் திருட்டுபோனது.

அரியலூர்

செந்துறை:

பணம் திருட்டு

அரியலூர் மாவட்டம், செந்துறையில் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு செந்தூர்முருகன் என்ற பெயரில் விதைகள், உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்த பின்னர், அதன் உரிமையாளர் ஜெயா வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் இணையதள 'மோடம்' திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணை

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அந்த கடை உள்ள கட்டிடத்தின் சுற்றுச்சுவர் வழியாக மாடிக்கு சென்றுள்ளனர். பின்னர் மாடிப்படி கதவின் பூட்டை உடைத்து படிகள் வழியாக இறங்கிய மர்மநபர்கள், கடை முன்பிருந்த தடுப்பு கம்பிகளில் துளையிட்டு உள்ளே சென்று, பணம் மற்றும் மோடத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

மேலும் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ் நிலையம் அருகே ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு உள்ள கடையில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story