தேனி: மோட்டார் சைக்கிள் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த லாரி - 2 பேர் உயிரிழப்பு


தேனி: மோட்டார் சைக்கிள் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த லாரி - 2 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 Jun 2022 11:24 AM GMT (Updated: 10 Jun 2022 6:32 AM GMT)

ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது30). இவர் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.

இந்த நிலையில் குழந்தைக்கு சாப்பாடு வாங்குவதற்காக மணிகண்டனும், குமணன்தொழு பகுதியை சேர்ந்த சுருளிவேல்(45) என்பவரும் மோட்டார் சைக்கிளில் க.விலக்கு-வைகை அணை சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றனர்.

சாப்பாடு வாங்கிவிட்டு இரண்டு பேரும் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மணிகண்டனும், சுருளிவேலும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த க.விலக்கு போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்த லாரி டிரைவர் மொக்கராஜ் என்பரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story