கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா


திருக்கருகாவூர் கர்ப்பரட்சாமிகை அம்மன் கோவிலில் நடந்த தெப்பத்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவில்

பாபநாசம் அருகே திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் சமேத முல்லைவனநாதர் கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடந்தது. இதை தொடர்ந்து 23-ந்தேதி சரஸ்வதி பூஜையையொட்டி கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தெப்பத்திருவிழா

விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் விஜயதசமியையொட்டி மாலையில் சந்திரசேகரசாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும், இரவில் தெப்பத்திருவிழாவும் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகை அம்மன் எழுந்தருளினர். பின்னர் கோவில் ஷீரகுண்டம் குளத்தில் தெப்பம் 3 முறை வலம் வந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story