மஞ்சள், நீல வசீகரன், சிறுத்தை சிறகன் என பட்டாம்பூச்சியில் பல ரகங்கள்


மஞ்சள், நீல வசீகரன், சிறுத்தை சிறகன் என பட்டாம்பூச்சியில் பல ரகங்கள்
x
தினத்தந்தி 27 Sep 2022 8:05 PM GMT (Updated: 27 Sep 2022 8:06 PM GMT)

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாக பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் 25-க்கும் மேற்பட்ட வண்ணத்து பூச்சிகள் கண்டறியப்பட்டது.

மதுரை

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் விலங்கியல் துறை சார்பாக பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் 25-க்கும் மேற்பட்ட வண்ணத்து பூச்சிகள் கண்டறியப்பட்டது.

தொடக்க விழா

மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விலங்கியல் சங்கம் தொடக்க விழா மாணவிகளின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. நிகழ்வுக்கு பொறுப்பு முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். விலங்கியல் துறைத் தலைவர் மலர் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் கலந்துக் கொண்டு, பட்டாம்பூச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார். அவர் பேசும்போது, பட்டாம்பூச்சிகள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் துணை புரிகின்றன. பூச்சிகளின் மகரந்தச் சேர்க்கை மூலம் தான் 70 சதவீதம் உணவு தயாரிப்பு நடைபெறுகிறது. உலகில் 90 சதவீத உணவு தேவையைப் பூர்த்தி செய்யும் 100 தாவரங்களில் 71 தாவரங்கள் பட்டாம்பூச்சி போன்ற பூச்சிகளால் மகரந்த சேர்க்கை ஏற்படுகின்றன.. தமிழகத்தில் உள்ள மலைத் தொடர்களில் நிலவும் காலநிலை 324 வகையான பட்டாம்பூச்சிகளின் தாயகமாக விளங்குகிறது. வீடுகளில் கறிவேப்பிலை, இட்லி பூ, செம்பருத்தி போன்ற பூச்செடிகளை வீட்டில் வைத்தால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றார்.

நீல புலி

பின்னர் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள பட்டாம்பூச்சிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், ரோஜா வண்ணத்தி, சிறுத்தை சிறகன், மஞ்சள் சிறகன், தொண்டை வெள்ளையன், நீல வசீகரன், சாக்லேட் வசீகரன், சாம்பல் வசீகரன், மஞ்சள் வசீகரன், எலுமிச்சை வசீகரன், கறிவேப்பிலை அழகன், வெந்தய வரியன், நீல புலி, வெண்மதி, நாட்டு நீல அழகி, மஞ்சளாத்தி உள்பட 25-க்கும் மேற்பட்ட பட்டாம் பூச்சிகளின் சிற்றினங்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிகழ்வில் விலங்கியல் துறை மாணவர்கள் பங்கேற்றனர்.


Next Story