அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்


அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்
x
தினத்தந்தி 27 March 2023 11:16 AM GMT (Updated: 27 March 2023 11:38 AM GMT)

'அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்' என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சி பாலக்கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அ.ம.மு.க. நிர்வாகி திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதவி வெறியால் ஒரு சிலரின் சுய நலத்தால் அ.தி.மு.க தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதை மீண்டும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம்.

பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுத வராத காரணத்தை அந்த துறையின் அமைச்சர் புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டும்.

அ.தி.மு.க. வில் ஒரு லட்சம் பழனிச்சாமிக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். அதன் மூலம் அ.தி.மு.க வில் அவரே ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார்.

அது சரி தான். பதவி பிழைப்பு, சொந்த பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிலர் அ.ம.மு.க வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் கட்சி மாறுகிறார்கள்.

2013-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்தவர் ராகுல் காந்தி.

இன்று அந்த சட்டத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அவரை பதவி நீக்கம் செய்திருப்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை என்றார்.


Next Story