தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை இல்லை: அரசின் உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பு


தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை இல்லை: அரசின் உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பு
x

தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை இல்லை என்றும், இதுதொடர்பாக அரசின் உத்தரவை ரத்து செய்தும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை,

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின் படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

அதேபோல, புகையிலைப் பொருட்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு மே 23-ந்தேதி பிறப்பித்த அறிக்கை செல்லாது என்று அறிவிக்க கோரி கர்நாடகாவை சேர்ந்த புகையிலை நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து.

அதிகாரம் இல்லை

அந்த மனுவில் 'புகையிலை பொருட்கள் என்பது உணவு பொருள் இல்லை என்பதால், அது உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் வராது. ஏற்கனவே, புகையிலை பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பர தடை, விற்பனை ஒழுங்குமுறை, தயாரிப்பு வினியோகம்) சட்டம் 2003 கொண்டு வந்துள்ளது. அந்த சட்டத்தின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் அடிப்படையில் புகையிலை பொருட்களை தடை விதிக்க ஆணையருக்கு அதிகாரம் இல்லை' என்று கூறப்பட்டு இருந்தது.

உயிர்பலி

இந்த வழக்குகளை நீதிபதி ஆர்.சுப்பிரமணியம், கே.குமரேஷ் பாபு ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்சு விசாரித்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் 'குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க உணவு பாதுகாப்புத்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. புகையிலை பயன்பாட்டினால் ஏராளமான உயிர் பலி ஏற்பட்டது. புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட காரணத்தினால், புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது' என்று வாதிடப்பட்டது

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

பறவை காய்ச்சல்

பொது சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதும்பட்சத்தில், மாநிலம் முழுவதும், அல்லது ஒரு பகுதியிலோ எந்த ஒரு உணவுப் பொருட்களுக்கும் ஓர் ஆண்டுக்கு தடை விதிக்க உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.

எங்களது கருத்தின்படி இந்த சட்டத்தின்படி ஆணையருக்கு வழங்கப்பட்டு உள்ள இந்த அதிகாரம் ஒரு பொருளை தற்காலிகமாக தடை விதிக்க மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர நிரந்தரமாக தடை விதிக்க முடியாது.

உதாரணத்துக்கு பறவை காய்ச்சல் பரவும்போது கோழி பண்ணைகள், கோழிகளை எடுத்துச்செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்க முடியும். ஆனால் நிரந்தரமாக எந்த ஒரு பொருளையும் தடை விதிக்க முடியாது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை நாங்கள் முழுவதும் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த வழக்கு விசாரணையின்போது, சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில், புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதே தவிர, கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படவில்லை.

எனவே, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதித்து ஆணையர் பிறப்பித்த அறிவிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டால், அது சட்டத்துக்கு எதிராக செயல்பட அனுமதித்து போல் ஆகிவிடும்.

உத்தரவு ரத்து

எனவே, புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்பு ஆணையரின் அறிவிக்கையின் அடிப்படையில் ஏற்கனவே தொடரப்பட்ட குற்ற வழக்குகளையும் ரத்துசெய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


Next Story