அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது


அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது
x

அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது

தஞ்சாவூர்

அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. மீண்டும் ஆட்சியில் அமரும் நேரம் நெருங்கிவிட்டது என முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

வருகிற 29-ந் தேதி தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. இதற்கு அ.தி.மு.க அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத் தலைவர் திருஞானசம்பந்தம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை. திருஞானம், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி. சேகர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி வரவேற்றார்.

கூட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக ஆன பிறகு முதன்முறையாக தஞ்சைக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு செங்கிப்பட்டி முதல் வடக்கூர் வரை எழுச்சியான வரவேற்பு அளித்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி. தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. இப்போது தான் கூடுதல் எழுச்சியோடு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. உறுப்பினர் அட்டை பெற வழங்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து 2 நாட்களுக்குள் தலைமை கழகத்திடம் வழங்க வேண்டியது நமது தலையாய பணி.

மக்கள் இயக்கம்

அ.தி.மு.க. ஒரு மக்கள் இயக்கம். அ.தி.மு.க.வுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் தான் நிறைவடைந்து இருக்கிறது. அதற்குள் மக்களிடம் நிறைய கெட்ட பெயரை தி.மு.க. பெற்றுள்ளது. இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணி கொண்டு இருக்கிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தை கொடுத்து அதை மறைக்க பார்த்தார்கள். ஆனால் அது விமர்சனமாகிவிட்டது. தஞ்சை கீழஅலங்கத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது குடித்து 2 பேர் இறந்துவிட்டனர். இவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருக்கிறது என கூறுவது இந்த பிரச்சினையை திசை திரும்பும் முயற்சியாகும்.

சட்டம்-ஒழுங்கு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக சென்று கவர்னரிடம் மனு அளித்துள்ளோம்.

2 ஜி வழக்கு எப்படி ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்ததோ? அதேபோல் ரூ.30 ஆயிரம் கோடி பிரச்சினை தி.மு.க. ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருக்கும். அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமருவதற்கான நேரம் நெருங்கிவிட்டது.

கூடுதல் பலம்

அ.தி.மு.க.வில் இணைய பலர் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் இணையும் போது கூடுதல் பலம் கிடைக்கும். வருகிற 29-ந் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அரசு கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் நாகராஜன், செயற்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி, ஜெயலலிதா பேரவை செயலாளர் மனோகர், நிர்வாகிகள் பொன்முத்துவேல், மகாலிங்கம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், அனைத்துப்பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன் நன்றி கூறினார்.


Next Story