அரசு பஸ்கள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை-போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி


அரசு பஸ்கள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை-போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி
x

அரசு பஸ்கள் தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு புதிதாக 2 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் இந்த திட்டம் தாமதமானது. தற்போது அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இதற்கான டெண்டர் கோரப்பட்டு அதில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். 8 அல்லது 9 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து விரைவாக புதிய பஸ்களை அறிமுகப்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் புதிய பஸ்கள் வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் என்பதை நிர்மாணித்தவர் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான். மேலும், தனியார் வசம் இருந்த பஸ்களை அரசுடைமையாக்கி நகர்புறத்தில் மட்டுமே இயங்கி வந்த பஸ்களை கிராமப்புறங்களுக்கும் செல்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தார். கருணாநிதி வழியில் செயல்படுகின்ற மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அரசு பஸ்களை தனியார் மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர்களுக்கான இலவச பயண திட்டம், பெண்களுக்கான இலவச பயண திட்டம் என இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மிக சிறப்பான முறையில் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எனவே இந்த திட்டங்கள் எப்போதும் போல் தொடரும். ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை நான் பொறுப்பேற்ற பிறகு 2 கட்டமாகவும், மொத்தமாக 5 கட்டங்களாகவும் நடைபெற்றுள்ளது. ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தற்போது சென்னையில் அரசு மினி பஸ்களை இயக்க புதிய வழித்தடங்களை கண்டறிந்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக்கழகங்கள் உள்ளன. அவற்றில் எவ்வளவு டிரைவர் மற்றும் கண்டக்டர் தேவை என்பதை கணக்கெடுத்து, பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story