75 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது


75 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது
x

பழனியில், 75 வழக்குகளில் தொடர்புடைய திருடனை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்தவர் துரை தமிழரசன் (வயது 33). இவர், புளியம்பட்டி நால்ரோடு பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் இவர், தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை அவர் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து கீரனூர் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பழனியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சித்திரைவிளக்கு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (44) என்பதும், புளியம்பட்டியில் உரக்கடையில் பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான லட்சுமணன் மீது புதுக்கோட்டை, திருப்பூர், திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களில் 75 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

------


Next Story