திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொண்டை ஊசி வளைவுகள்
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்து பாதையாக திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி பழுதாகி நிற்பதும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டத்திற்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. நேற்று காலை 10 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் 23-வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும் போது பழுதாகி அப்படியே நின்று விட்டது. மேற்கொண்டு லாரியை டிரைவரால் இயக்க முடியவில்லை. இதனால் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு மதியம் 12 மணியளவில் அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.