மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி
![மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி](https://media.dailythanthi.com/h-upload/2023/03/26/1204033-5.webp)
மாவட்ட மைய நூலகத்தில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 47-வது சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்றார். நூலகர் மேரிரோசரி சாந்தி முன்னிலை வகித்தார். இறைவி என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிதா ஜவகர் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், அன்பே உலகின் மிகப்பெரிய சக்தி. தன்னை வெளிகாட்டும் அறிவை விட பிறரை நேசிக்கும் அன்பு பெரியது. எவ்வளவு குற்றம் குறைகள் இருந்தாலும் அதை மன்னிக்கும் மனப்பான்மை பெற்ற பெண்கள் தான் இறைவிகள். புத்தகம் படிக்கும் போதுதான் குற்றம் குறைக்கப்படுகிறது. வெற்றியாளராக உருவாக புத்தகத்தை நேசித்து படியுங்கள. இவ்வுலகில் அம்மாவின் அன்பிற்கு இணையானது ஏதுமில்லை. உலகின் அனைத்து மொழிகளிலும் அழகான சொல் அம்மா தான். தாயாய், தாரமாய், உடன்பிறந்த சகோதரியாய் பெற்றெடுத்த மகளாய் பேணிகாக்கும் உறவாய் அனைத்திற்கும் மேலே இறைவியாய் நம்முள் இணைந்துள்ளவர்கள் பெண்களே, என்றார். இந்நிகழ்ச்சியில் கவிதா ஜவகர், தான் எழுதிய நீயே முளைப்பாய் என்ற புத்தகம் விற்பனையில் கிடைத்த ரூ.5 ஆயிரத்தை மாவட்ட மைய நூலகத்திற்கு வழங்கி பெரும்புரவலராக தன்னை இணைத்து கொண்டார்.