திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: 6 காவலர்கள் மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம்


திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: 6 காவலர்கள் மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம்
x

திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலியாக 6 காவல் அதிகாரிகளை மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த சூழலில் 4 ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையின் முக்கிய பகுதிகள், டோல்கேட் பகுதிகளில் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி, மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் ரூ. 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்பட 6 பேரை மாவட்ட ஆயுதப் பணிக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story