தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம்


தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2023 9:45 PM GMT (Updated: 20 Jun 2023 9:45 PM GMT)

கூடலூர்-ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகனங்களை நிறுத்தக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வாகனங்களை நிறுத்தக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

புலி நடமாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடிகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் பயிர்களையும் நாசம் செய்து வருகிறது.

சில சமயங்களில் இரவில் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து வளர்ப்பு பிராணிகளை பிடித்து செல்கிறது. இந்தநிலையில் கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளதால் வனவிலங்குகள் சாலையோரம் அடிக்கடி உலா வருவது வழக்கம். தற்போது கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நடுவட்டம், டி.ஆர். பஜார் பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

வாகனங்களை நிறுத்தக்கூடாது

கூடலூர் வாகன ஓட்டிகள் இரவில் வந்து கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் புலி சர்வ சாதாரணமாக நடந்து சென்றது. இதேபோல் இரவில் அடிக்கடி புலி நடமாடுவது தெரிய வந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை இரவில் சாலையோரம் நிறுத்தி ஓய்வு எடுக்கக்கூடாது.

மேலும் 27-வது மைல் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டமும் உள்ளதால் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சுற்றுலா பயணிகள் தொலைவில் இருந்து வருவதால் நெடுஞ்சாலையில் பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுக்கின்றனர். ஆனால், புலி நடமாட்டம் இருப்பதை அறிவதில்லை. எனவே, சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்றனர்.


Next Story