கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால்முகமது, பிஷப்ஹீபர் கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி


கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால்முகமது, பிஷப்ஹீபர் கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 21 Sep 2023 9:10 PM GMT (Updated: 21 Sep 2023 9:38 PM GMT)

கைப்பந்து போட்டியில் திருச்சி ஜமால்முகமது, பிஷப்ஹீபர் கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

திருச்சி

பெண்கள் கைப்பந்து

மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கைப்பந்து போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்று வருகிறது. மதர்தெரசா கோப்பைக்கான இந்த போட்டி லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 8 கல்லூரி அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் நேற்று மாலையில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஜமால் முகமது கல்லூரி அணி, பாரதிதாசன் பல்கலைக்கழக அணியை எதிர்கொண்டு விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய ஜமால் முகமது கல்லூரி அணி 28-11, 25-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. மற்ற லீக் ஆட்டங்களில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி, சேலம் ஸ்ரீசக்தி கைலாஷ் கல்லூரி, நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

அரையிறுதி போட்டிகள்

'லீக்' ஆட்டங்களின் முடிவில் திருச்சி ஜமால்முகமது, சேலம் ஸ்ரீசக்தி கைலாஷ், திருச்சி பிஷப்ஹீபர், நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் நடக்கும் அரையிறுதி போட்டிகளில் ஜமால்முகமது கல்லூரி, பிஷப்ஹீபர் கல்லூரி அணியுடனும், சேலம் சக்தி கைலாஷ், நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலையில் இறுதி போட்டியும், அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.


Next Story