திருவள்ளூர்: அரசு பஸ்சுக்குள் ஒழுகிய மழைநீர் - பயணிகள் அவதி


திருவள்ளூர்: அரசு பஸ்சுக்குள் ஒழுகிய மழைநீர் -  பயணிகள் அவதி
x

திருவள்ளூர் அருகே அரசு பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பேருந்துகள் பழுதாகியும் சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கனமழை பெய்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து புல்லரம்பாக்கம், பூண்டி, நம்பாக்கம் வழியாக பென்னலூர்பேட்டை சென்ற அரசு பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது திருவள்ளூர் பகுதியில் கனமழை பெய்தது.

இதில் பேருந்தின் மேற்கூறையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அவதியுற்றனர் . இதில் குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பேருந்திற்குள் குடை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பழுதடைந்த பேருந்துகளுக்கு பதிலாக மாற்று பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story