வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினர்


வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினர்
x

வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினார்கள். தேர்வு கூடங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினார்கள். தேர்வு கூடங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் பல்வேறு பதவிகளுக்கான குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 41,307 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்காக வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, பேரணாம்பட்டு ஆகிய 6 தேர்வு மையங்களில் பள்ளி, கல்லூரிகள் என்று மொத்தம் 142 தேர்வு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. 9 மணிக்கு பின்னர் வருபவர்கள் தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் காலை 7.30 மணி முதல் தேர்வர்கள் தேர்வு கூடத்துக்கு வரத்தொடங்கினார்கள். அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், கால்குலேட்டர், கைக்கெடிகாரம், புத்தகங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 34,127 பேர் எழுதினார்கள். 7,180 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் பள்ளி, காட்பாடி அரசு மகளிர் பள்ளி, சன்பீம்பள்ளி, டான்போஸ்கோ பள்ளி உள்பட பல்வேறு தேர்வு கூடங்களில் நடந்த தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் உதவி கலெக்டர்களும் தேர்வு கூடங்களை பார்வையிட்டனர்.

இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 142 முதன்மை கண்காணிப்பாளர்கள், 142 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். மேலும் தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தவிர்க்க 13 பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

தாமதமாக வந்த தேர்வர்கள்

அதைத்தவிர தேர்வு கூடங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு செல்லும் பணியில் 43 மொபைல் டீம் ஈடுபட்டிருந்தனர். தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வு கூடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காலை 9 மணிக்கு மேல் தேர்வு கூடத்துக்கு வந்த தேர்வர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனால் தாமதமாக தேர்வு எழுத வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் தேர்வு கூடத்தின் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி மற்றும் போலீசாருடன் உள்ளே அனுமதிக்கக்கோரி வாக்குவாதம் செய்தனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டில் 4 மையங்களில் தேர்வு நடந்தது. ேரணாம்பட்டு அரசு மகளிர் மேனிலைப் பள்ளியில் 345 பேரும், இஸ்லாமியா மேனிலைப் பள்ளியில் 255 பேரும், நுஸ்ரத்துல் இஸ்லாம் பெண்கள் மேனிலைப் பள்ளியில் 230 பேரும், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 171 பேரும் என மொத்தம் 1,001 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களை பறக்கும் படை அதிகாரியும், மாவட்ட முத்திரை கட்டண தனித்துணை கலெக்டருமான ராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன் மற்றும் வருவாய் துறையினர் உடனிருந்தனர்.


Next Story