டி.என்.பி.எஸ்.சி. மூலம் பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள 85 பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி தகவல்


டி.என்.பி.எஸ்.சி. மூலம் பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள 85 பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை - அமைச்சர் மூர்த்தி தகவல்
x

பத்திரப்பதிவு துறையில் காலியாக உள்ள 85 பணி இடங்களை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.

சென்னை,


சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மாவட்ட பதிவாளர்கள், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (முத்திரை) மற்றும் தனி துணை ஆட்சியர்களின் (முத்திரை) பணி சீராய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பதிவு துறையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கபூர்வமான அறிவுரைகளை வழங்கி உள்ளார். அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் வருவாயை உயர்த்துவதற்கு எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட பதிவாளர் தணிக்கை மற்றும் துணை தலைவர்களுடன் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம். பத்திரங்கள் பதியப்படும் போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை கலைவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தவறான செய்திகள் பரப்புவதை தடுக்கும் வகையிலும், நேர்மையான முறையில் பதிவு நடைபெறும் வகையிலும் இடைத்தரகர்கள் பத்திரப்பதிவு நடைபெறும் இடத்தில் இருக்க கூடாது என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் பத்திரப்பதிவுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பத்திரப்பதிவுத்துறையில் காலியாக உள்ள 85 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், அவருடைய மகன் நயினார் பாலாஜி மற்றும் பத்திரப்பதிவு, வருவாய் துறை அலுவலர் சேர்ந்து சென்னை ஆற்காடு சாலையில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை மோசடி பத்திரப்பதிவு செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 15 நாட்களில் புகார் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story