கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முன்னுரிமை கேட்ட வழக்கு தள்ளுபடி


கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முன்னுரிமை கேட்ட வழக்கு தள்ளுபடி
x

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முன்னுரிமை கேட்ட வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர்அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை சார்பில் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதில், 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள குரூப் 4 தேர்வு அறிவிப்பாணையில், கலப்பு திருமணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்த எந்த தகவலும் இல்லை. எனவே, கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரேஷ் உபாத்யாய் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். போட்டி தேர்வு மூலமாக மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. இது அரசின் கொள்கை முடிவு என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பணி விதிகள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடியாது. மேலும், மனுதாரர் கலப்பு திருமணம் புரிந்தவர் அல்ல. அதனால், இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை உரிமை இல்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story