கோமாரி நோயை கட்டுப்படுத்த வேண்டும்


கோமாரி நோயை கட்டுப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 Nov 2022 7:30 PM GMT (Updated: 3 Nov 2022 7:30 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளுக்கு அதிகரித்து வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளுக்கு அதிகரித்து வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்

கால்நடைத்துறை கூட்டம்

கிருஷ்ணகிரியில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களின் துறை ரீதியான கூட்டம் நேற்று நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மண்டல துணை இயக்குனர் மணிசுந்தர், உதவி இயக்குனர் அகல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாடுகளுக்கு கோமாரி, பெரியம்மை, தோல் தடிமன் நோய்கள் அதிகரித்து வருகின்றன. இந்நோய்களை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு துறையினர் விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். நோய்களின் தன்மை அறிந்து, தடுப்பு மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும். மக்கள் குறை கூறாத அளவிற்கு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

கோரிக்கைகள்

தொடர்ந்து கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன் மாடுகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் வலியுறுத்தி பேசினார்.

பின்னர், மருத்துவ பணியாளர்கள் சார்பில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ பணியாளர்கள், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கால்நடை துறை மருத்துவமனை நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைக்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கோட்ட அளவிலான கால்நடை உதவி மருத்துவர்கள் ரமேஷ், பிரபு, தினேஷ், சாமிநாதன், சுப்பிரமணி, ராஜ், உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story