மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும்

வருமானத்தை அதிகரிக்க விவசாயிகள் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.
வருமானத்தை அதிகரிக்க விவசாயிகள் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க வேண்டும் என்று சப்-கலெக்டர் பிரியங்கா பேசினார்.
கண்காட்சி
கோவை மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் மாவட்ட அளவில் உயர்தர உள்ளூர் ரகங்க ளை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி பொள்ளாச்சி அருகே கொங்குநாட்டான் புதூரில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கண்காட்சியை சப்-கலெக்டர் பிரியங்கா தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 348 மதிப்புள்ள இடுப்பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை சப்-கலெக்டர் பிரியங்கா வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
வருமானம் அதிகரிக்கும்
பாரம்பரிய சிறுதானியங்களை மீண்டும் கொண்டு வருவதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா போன்ற நெல் ரகங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. வறட்சியை தாங்கி வளரும் இந்த ரகங்கள் மூலம் அதிக வருமானம் கிடைக்கும்.
பாரம்பரிய உணவுகளை தவிர்த்து தற்போது துரித உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
உடல் நலத்தை பாதுகாக்கவும், அதிக வருவாய் கிடைக்க வழிவகை செய்யவும் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறு தானியங்களை சாகுபடி செய்ய வேண்டும்.
மேலும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலைநிகழ்ச்சிகள்
கண்காட்சியில் பழங்காலத்தில் பயன்படுத்திய பாரம்பரிய நெல் ரகங்கள், சிறு தானியங்கள் மற்றும் பித்தளை இட்லி சட்டி, மர அகப்பை, சல்லடை, எச்ச களையம், பூஜைத்தட்டு, கூஜா, திருகினி சொம்பு, டம்ளர், முறம், அரிசி படிகள் போன்றவை வைக்கப்பட்டு இருந்தன. இதையொட்டி மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வேளாண்மை துறை துணை இயக்குனர் புனிதா மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






