சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் - வேளாண்மை துறை


சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் - வேளாண்மை துறை
x
தினத்தந்தி 21 Nov 2022 3:25 AM GMT (Updated: 21 Nov 2022 3:33 AM GMT)

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் என வேளாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா, தாளடி, பிசான பருவ பயிர்களுக்கான காப்பீடு கடந்தசெப்.15-ம் தேதி பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தொடங்கப்பட்டது. இதுவரை 11 லட்சம் விவசாயிகளால் 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழைபெய்துவரும் நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு,திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான அவகாசம் கடந்த நவ.15-ம் தேதியுடன் முடிவடைந்தது.

நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 21-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் எனவும் இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யது கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே பயிர் சேதம் பற்றி முழுமையாக தெரியவரும் எனவும் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story