வேப்பனப்பள்ளி அருகே விலை வீழ்ச்சியால் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்ற விவசாயி


வேப்பனப்பள்ளி அருகே விலை வீழ்ச்சியால் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்ற விவசாயி
x
தினத்தந்தி 24 April 2023 7:00 PM GMT (Updated: 24 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே விலை வீழ்ச்சியால் 3 டன் தக்காளிகளை ஆற்றில் கொட்டி சென்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

தக்காளி சாகுபடி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்கு சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வேப்பனப்பள்ளி பகுதிக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 2 முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 15 கிலோ கொண்ட கூடை 30 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி சாகுபடிக்கு போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தக்காளிகளை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளனர்.

ஆற்றில் கொட்டினர்

இந்த நிலையில் வேப்பனப்பள்ளி அருகே பதிமடுகு கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் என்பவர் நேற்று காலை தனது தோட்டத்தில் பறித்த தக்காளிகளை கிருஷ்ணகிரியில் உள்ள தக்காளி சந்தைக்கு விற்க சென்றார். ஆனால் விலை சரிவால் தக்காளியை விற்க முடியாமல் வேதனை அடைந்த விவசாயி வீடு திரும்பினாா.

பின்னர் நாச்சிகுப்பம் அருகே உள்ள மார்க்கண்டேயன் நதியில் சரக்கு வாகனத்தில் இருந்த சுமார் 3 டன் தக்காளியை ஆற்றில் கொட்டி சென்றார். விவசாயியின் இந்த செயல் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story