சிறந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


சிறந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 16 May 2023 6:45 PM GMT (Updated: 16 May 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற சிறந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள

தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பு உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெறவிண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும் அதிகபட்சம் 25 நபர்கள் வரை, அதிகபட்சம் உதவித் தொகை ஒரு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை வழங்கப்படும். ஊக்கத்தொகை பெற தகுதிகள் கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது கடந்த 2 ஆண்டுகளில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறு பவை) பங்கு பெற்றிருக்க வேண்டும்.

முதல் 8 இடங்களில்

ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த 2 ஆண்டுகளில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும். பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 75 நபர்கள் அதிகபட்சம் உதவித் தொகை ஒர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

தங்கப்பதக்கம் வென்றவர்கள்

இத்திட்டத்தின் தகுதிகள் அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 1.12.2022-ந் தேதி 23 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 10 மாற்றுத்திறனாளிகள் உள்பட 100 நபர்கள் அதிகபட்சம் உதவித்தொகை ஒர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் தகுதிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும் 1.12.2022 அன்று 20 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான வின்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும்.

வருகிற 20-ந் தேதிக்குள்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் WWw.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழி மற்றும் நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

புதுப்பித்துக்கொள்ளலாம்

மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22-12-2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கெனவே உள்ள தங்களுடைய பதிவு எண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம்.

புதிய விண்ணப்பதார்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி வரை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். இவ்விவரங்களை பற்றி அறிய ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story