கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை விடுமுறையை கொண்டாட  ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

சுற்றுலா தலம்

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வர். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக- தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

தீவிர கண்காணிப்பு

பின்னர் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர். மேலும் மெயின் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story