ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

தர்மபுரி

பென்னாகரம்:

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

நீர்வரத்து குறைந்தது

சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கடந்த மாதம் தமிழக-கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து பரிசல் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனிடையே ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்றுமகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். வெள்ளப்பெருக்கின் போது நடைபாதை, மெயின் அருவி, சினிபால்ஸ் ஆகியவை சேதமடைந்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.


Next Story