குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 2 Oct 2023 4:14 AM GMT (Updated: 2 Oct 2023 6:37 AM GMT)

குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த காலங்களில் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான சீசன் காலம் முடிந்த பிறகும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.

நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று விடுமுறை தினத்தையொட்டி ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கான தடை தொடர்கிறது.


Next Story