பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை


பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால், கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பேரிஜம் ஏரி உள்ளது. நன்னீர் ஏரியான இங்கு வனத்துறையினரின் அனுமதி பெற்று கட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். இந்த ஏரிக்கு செல்லும் மலைப்பாதையில் மதிகெட்டான் சோலை, அமைதி பள்ளத்தாக்கு, தொப்பி தூக்கி பாறை, பேரிஜம் ஏரி வியூ ஆகிய சுற்றுலா இடங்கள் உள்ளன. இதனை பார்வையிடுவதற்காக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் பேரிஜம் ஏரி பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி நடமாடும் பகுதியாக உள்ளது. இதை கண்காணிக்க, தனியாக வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை குட்டியுடன் 5 காட்டு யானைகள் பேரிஜம் ஏரி மதகுப்பகுதியில் உலா வருவதை வனத்துறையினர் பார்த்தனர். மேலும் அந்த காட்டு யானைகள் அங்கேயே முகாமிட்டிருந்தன. இதையடுத்து பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பேரிஜம் ஏரி பகுதியில் 5 காட்டு யானைகள், குட்டியுடன் முகாமிட்டுள்ளன. குட்டி யானையால் நடக்க இயலாத நிலை உள்ளது. இதனால் காட்டு யானைகள் அங்கேயே சுற்றி வருகின்றன. எனவே யானைகள் நடமாட்டம் குறைந்த பிறகே, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றனர். இதனால் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்காக வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்றிருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story